பிண ஊர்வலத்தில்
வீசி எறியப் பட்ட
மலர் ஒன்று
காலடிகள் பட்டு
கசங்கிய நிலையில்
என்னைப் பார்த்துக்
கேட்டது
"நான் இப்படி
இருக்க
உனக்கு
உசிதமா என்று?'.
உதிர்ந்து கொண்டு இருந்த
ஆலிலை மேலே
ஒட்டி இருந்த
ஒரு நீர்த் துளி கேட்டது.
"நீ முதலில் விழுவாயா
இல்லை நான் முதலில் விழுவேனா?".
"இப்போது அது இல்லை என் கவலை.
நான் முதலில் விழுந்து
நீ என் மேல் விழுந்தால்
நான் தாங்கிக் கொள்வேன்.
நீ முதலில் விழுந்து
நான் உன் மேல் விழுந்தால்
நான் உன்னைக் கொல்வேன்.
தனி தனியாய் விழுந்தால்
நீ உரு மாறுவாய்
நான் சிதைவேன்.
என்ன செய்வது?"
என்றது கவலையுடன்.
சிறிது நேர சிந்தனைக்குப்
பின்
இரண்டும் ஒன்றை ஒன்று
முத்தமிட்டுக் கொண்டன.